வாழ்த்துக்கள்


கவிஞர் இதயதாசன்
அண்ணா திடாவிட முன்னேற்றக் கழகம்
துணை செயலாளர், மாவட்ட இலக்கிய அணி
24/19, ஜடையினா ஹாஜியார் தெரு, புலவர் கோட்டை,
செல்லிடை: 9486601182/ 04365-251716
நாகூர் – 611002

அன்பின் நண்ப ..

அறிவுடை கவிஞா
அந்த நாள் ஞாபகம்
அப்துல் கையூம்
ஆக்கிய பொங்கலை
அள்ளியும் உண்டேன்.

அசையா தமர்ந்து
அனைத்தையும் சுவைத்தேன்
எண்ணக் குவியலில் இருந்ததைக் கொஞ்சம்
வண்ண வார்த்தையால்
வருணித்தீரே …!

வழக்குச் சொல்லை,
வசைமொழிக் கூற்றை
கணக்காய்ச் சமைத்து
பந்தியும் இட்டீர் ..!

திரைக்கடல் தாண்டியும்
திருத் தமிழ்ப்பணியை
நுரைப் பூவாக்கி
நுகரவும் வைத்தீர்
நவீன
‘கட்ட பொம்மனே’ !

தமிழை மறந்த
தமிழர் சபையில்
அமிழ்தம் தமிழை
அளவே செய்தீர் !

தங்கக் கடையில்
சங்கத்தமிழை;
பாலை மண்ணில்
பதியம் போட்டீர்…!

நீ
வாழிய வாழியவே !

என்றும் நிறைவுடன்
இதய தாசன்
20.08.07

என் அன்பிற்கினிய ஆசான்

Crescent Residential School - First Batch

Crescent Residential School - First Batch

 

அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்

திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்

 

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

 

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.

1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

 

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

 

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை – ஆறு ஆண்டுகள் – அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

 

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள்.  கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

 

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

 

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

 

நாஞ்சில் ஷா காட்டுகின்ற

நல்ல நபி நாயகத்தை

வாஞ்சையுடன் பார்த்தபின்னர்

மற்றவற்றைக் கற்பதற்குக்

கடைகடையாய் ஏறிக்

கால்வலிக்க நான் நடந்தேன்;

 

எத்தனையோ அற்புதங்கள்

எத்தனையோ அதிசயங்கள்

அன்னை ஆமினா

அளித்தமகன் வாழ்க்கையிலே!

 

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

 

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.  

 

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்

அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்

பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்

இறையருட் கவிமணி உள்ளம் !

 

அதனாலேதான் ..

கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து

அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென

பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை

நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

 

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

 

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

 

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே  உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.  

 

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

 

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

உடையான் சடையன்”  என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

 

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்

உள்ளச்சம் வையும் பிள்ளாய்”  என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

 

தபலா அதிர்வு போலத்

தாளம் பிசகாக் கதியில்

சபையில் ஒலிக்கும் பேச்சில் கபூர்

சந்தனம் கமழச் செய்வார் – என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

 

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

 

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!

ஆனால் அப்துல் கபூரோ

ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

 

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’)  பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

 

“இம்மை வாழ்வின் சோதனையில்

இதயப் பொறுமை தந்திடுவாய் !

வெம்மை நெருப்பை விட்டெம்மை

விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !

செம்மை பொழியும் சுவனத்தின்

செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !

எம்மை நல்லோர் நற்குழுவில்

என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

 

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன.  “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

 

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

 

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று  தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

 

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

 

ஈகைத் திருநாள்

இன்பம் தருக;

இறையருள் பொழிக !

 

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

 

– அப்துல் கையூம்

 

 

கவிஞர் வாலி

vali.jpg 
(கலைஞர் கருணாநிதியைப் புகழ்ந்து கவிஞர் வாலி)
 
நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்; தமிழ்க்
கடவுளென கண்முன் எழும்
 
மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!
 
நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!
 
மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!
 
சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?
 
என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?
 
உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!
 
கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!
 
ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!
 
பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!
 
அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர்யோக்கியம்?
 
சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!
 
நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது…
 
தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!
 
ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!
 
சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்…
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?
 
வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!
 
நீ
‘ஏ.எம்’ முதல்
‘பி.எம்’ வரை
சலிக்காது உழைக்கும்
‘சி.எம்’.
 
நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!
 
முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!
 
நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா
 
தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!
 
சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
 
சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
‘வந்தபின் பார்ப்போம்’ என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
‘வருமுன் காப்போம்’ என்று!
 
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்
 
இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
 
ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
‘டூ’ விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
 
நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!
 
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
‘அன்பின் வழியது உயிர்நிலை!’ என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!
 
மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.
 
‘அக்கா மகன்’ என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!
 
அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!
 
இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
 
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
 
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!
 
நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
‘நன்று!நன்று’
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!
 
பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்…
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்
 
– வாலி
 
 
 

imagescaf024u3.jpg

தேடல்கள் .. ..

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

உருளைகள்

prayer-beads.jpg 
தவசு மணி
ருத்திராட்சம்
ஜப மணி
ஜப மாலை
மிஸ்பாஹ்
தஸ்பீஹ்
ப்ரேயர் பீட்ஸ்
ரோசரி
பெயர்கள் வெவ்வேறு
நோக்கம் ஒன்று
உருளைகள்
கனத்தை இலகுவாக்கி
சுலபமாய்ஓட வைக்கிறதாம்
இது நியூட்டன் விதி
இந்த உருளைகள்
மனிதனை
இறைவனின்பால்
விரைவாய்
உருட்ட வைக்கிறது
முன்னது நியூட்டன் விதி
பின்னது ஆன்மீகத் துதி 
 
– அப்துல் கையூம் 
 

தேங்காப்பட்டணம்

வாழ்த்துரை

(14-10-2007 அன்று பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது யான் வாசித்தளித்த கவிதை)

ஒரு
மீனவக் குப்பத்தை
வானாளாவ உயர்த்திவைத்த
தீனோர்களுக்கு என் ஸலாம்

சாதிக்கென சங்கங்கள்
வீதிக்கொன் றிருக்கையிலே
ஆதியிலே அராபியரை
ஆரத் தழுவியதோர்

வேதமுறு மார்க்கமதாம்
சோதிமிகு இஸ்லாத்தை
ஆதியிலே – பாரத
மேதினியில் பரப்புதற்கு

காரணமாய் திகழ்ந்த
கடல் சூழ்ந்த இவ்வூர்க்கு
சங்கைமிகு இச்சங்கம்
சாலப் பொருத்தம்

என் ஆசான்
அப்துல் கபூர் அவர்களின்
உள்ளங்கவர் ஊர்
உங்கள் ஊர்

அந்த சந்தக்கவியை
நினைக்கையில் எல்லாம்
என் சிந்தையில் வந்து வந்து
இந்த ஊர் நிழலாடும்

வெள்ளித்திரை
வெற்றிகளுக்கே
வெற்றி விழா காணும்
வியாபார உலகில்

பழமை மிகு
பள்ளிக்கு பேர்போன
நல்லூரின் அமைப்புக்கு
இன்று வெள்ளி விழா !
மனந் துள்ளும் விழா!

தென்னைக்குள்
ஒளிந்திருக்கும்
இளநீருச் சுவைப்போல

தேங்கைக்கு
பல்வேறு
சுவைகள் உண்டு

இலக்கியத்தில்
இவர் பங்கு
ஏராளம் ஏராளம் !

இதற்கு
இன்பத்தமிழ் ஒன்றே
சான்றுரைக்கும் !

எண்ணற்ற அறிஞர்களை
ஈன்றெடுத்த பெருமைகள்
இவ்வூர்க்குண்டு !

பாலகவி
பக்கீர் சாகிப்
பாடிவைத்த
பாடல்களோ
பல நூறு .. ..

காலத்தால் அழியாத
காப்பியங்கள் வரலாறு.

குஞ்சுமூசா புலவரது
வாழ்த்து மாலை .. ..
குறையாத இன்பம் தரும்
இன்றும் நாளை.         

திருமலர் மீரான் முதல்
தேங்கை சர்புத்தீன் வரை
தீந்தமிழுக் காற்றியதோர்
மாபெரும் பங்கு.

மாலிக் இப்னு தீனாரின்
மகிமையினை பறைசாற்றும்
மாண்புகளை கூறிடவா?

‘அந்த அரபிக்கடலோரம்
உன் அழகைக் கண்டேனே !’ –என
அமுத கீதம் பாடிடவா?

‘நிங்கள்’ கேரளத்து நேசம்
உங்கள் பேச்சிலுண்டு வாசம்

தமிழுக்கு நீங்கள்
வார்த்த வார்த்தைகள்
வாசித்திட இயலாது ..!

கொசுவுக்கு ஒலுங்கென்று
சொல்லுவது
உங்களூரில் மட்டும்தான் !

– தேங்கா பட்டணம்
– தென்னை பட்டணம்
– தென் பட்டினம்
– தெற்கைபட்டினம்
– தர்ம பட்டணம்
– தேங்கை
– தேங்கையூர்
– குழந்தை நகர்

இவையாவும்
இவ்வூரின்
அழகுத் திருநாமங்கள்

– வண்டமிழ்
– தண்டமிழ்
– தீந்தமிழ்
– பைந்தமிழ்
– செந்தமிழ்
– இயற்றமிழ்
– இன்பத்தமிழ்
– முத்தமிழ்
– காவியத்தமிழ்

என்று விளங்கும்
எந்தமிழுக்கு
அடுத்தபடி ..

இத்தனை திருநாமங்கள்
இவ்வூருக்கு மட்டும்தான் !

வல்லிய பள்ளி .. .. ..!

விசாலம்
உங்கள் பள்ளியின்
பெயரில் மட்டுமல்ல

உங்கள்
மனதிலும்தான்.

இல்லாத குமர்களுக்கு
இல்வாழ்க்கை வகுப்பதுவும்;

கல்விக்கண் திறப்பதுவும்;
கரமுதவி நீட்டுவதும்;

மார்க்கப் பணிகளுக்கு
மனமுவந்து அளிப்பதுவும்;

பட்டியலிட்டாலும்
படித்து மாளாது.

நற்பணிகள் தொடரட்டும்;
நாயனவன் அருள்மழைகள்
நாள்தோறும் பொழியட்டும்.

அன்புடன்
அப்துல் கையூம்

பாங்கு சப்தம்

prayercall.jpg 

விசாலமற்ற மண்ணறையே

விலாசங்களாக மாற

மக்கிப்போன ஆடைகளினூடே

மரத்துப்போன என் தேகம்.

புழுக்களின் பிரவேசத்தில்

புழுக்கங்களின் பிரதேசத்தில்

புற்றாகிப்போன வெற்றுடல்.

ஊர்வனங்களின் ஊர்வலத்தில்

ஊர்வலமாய் வந்த நான்

கூறுகளாகி குதறியபிண்டமாய்

குரூரத்தின் சிதறலில்

உதிரங்கள் உறைந்து

உதிர்ந்தொழுகும் சடலமாகி

புரண்டுபடுக்கவும் நாதியற்று

அழுகும் நாற்றங்களில்

அசுத்தங்களே சுவாசங்களாக

பூச்சியின் கடைவாயில்

என் சின்னச் சின்ன

சதைத் துண்டுகள்.

நீட்டவும் மடக்கவும்

ஆட்டவே முடியாமல்

அசைவற்றுப் போன

நீர்த்துப்போன காற்றுப்பை.

கறையான்களுக் கிரையாகி

மேனியாவும் தீனியாக

கரைந்துருகும் மாமிசம்.

மயான பூமியில்

மணலரிப்புகளுக்கு ஏனோ

அவகாசமே இல்லாத

தலைபோகும் அவசரங்கள்.

இடைவெளி குறைந்து

எலும்புகள் நொறுங்க

துர்மணத்தின் வீச்சத்தில்

செத்த உடல்மீது

தத்தம் பணிகளை

நித்தம் புரியும்

சிற்றுயிர்கள்

சற்றே தளர்த்த

என்ன காரணமென

அண்ணாந்து நோக்க

ஆகாயத்தில் ஒலித்தது

“அல்லாஹு அக்பர்” என்ற

அழைப்புச் சப்தம்.

               – அப்துல் கையூம் 

ஆட்டம்

prayer.jpg 

விரலை ..                                                              

நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?                                                               நீட்டாமலே                                                      
தொழுவனுமா ?  
ஆட்டிக்கிட்டு                                                     
தொழுவனுமா ?                                                      
ஆட்டாமலே                                                      
தொழுவனுமா ?  
ஆட்டம் ..
முடிஞ்சு போகும்                                                       
முன்னாலே                                                                 
முதலில் சொல்லுங்க  
                                            
முடியாதபோது                                                                 
பெரிய தொல்லைங்க. கேட்டாலும்                                                              கேட்டீக ..                                                                       கேள்விகளை                                                          
போட்டீக ..  
வீட்டையுமே                                                         
ரெண்டாக்கி                                                                  
நாட்டையுமே                                                       
ரெண்டாக்கி போட்டியாக                                                          எங்களையும்                                                       
புறப்படத்தான்                                                           
வச்சீக ..  
இறப்பு ..                                                                         
எப்ப வரும் ?                                                                
ங்கே வரும் ?           
                                               
ஒண்ணும் தெரியலே !  
எப்ப உங்க                                                              
விவாதம் தீரும் ?                                                          
எதுவும் புரியலே !                                                             
நமக்கு தொழுகை                                                       
நடக்கும் முன்னே                                                             
நாம தொழுவணும்  
நாயனுக்கு                                                                
நன்றியினை                                                                 
நாளும் கூறணும்                                                       தொழுபவனே                                                                 
தொழ விடுங்க                                                              
அதுவே போதும்   
அப்புறமா வச்சிக்குங்க                                                    
உங்க                                                               
விதண்டாவாதம்.  
        
– அப்துல் கையூம்     

முஸல்லா

musalla.jpg

முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.

யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?

நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !

நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !

உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !

பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !

கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !

உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !

உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை

அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.

கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?

நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்

தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல

நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !

உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !

அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?

வருவாயா?
வருவாய்.

          அப்துல் கையூம்
 

பூஜ்ஜியம்

அன்று
எண்களுக்கும் 
எனக்குமிடையே
காரசார விவாதம்

பூஜ்யத்திற்கு
எதிராக
எண்களெல்லாம்
அணிதிரள

இலக்கங்கள்
விளக்கங்கள் வேண்டி
தர்க்கங்கள் செய்தன

எத்தனை பூஜ்ஜியமோ
அத்தனையும் சேர்ந்தாலும்
பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான்
பொரிந்து தள்ளியது எண்கள்

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை

திறந்த மேனியாய்
நிராயுதபாணியாய்
ஒற்றையாய் நின்ற
உயர்வுமிக்க
பூஜ்ஜியத்தை
புகழ்ந்து பேசினேன்

பூஜ்ஜியமே ..

உன் வெற்றிடமும்
எனக்கு
முழுமையாகவே
தெரிகிறது.

காலியானவன் நீ
காலாவதி ஆகாதவனும் நீ

நிறைவும் நீ
நிர்மூலமும் நீ

சூன்யம் நீ
என்றார்கள்

சூத்திரதாரியே
நீதானென்ற
சூட்சமத்தை
அறியாதவர்கள்

நீ
ஒளிவு மறைவு
இல்லாதவன்

அதனால்தானோ
உன் மதிப்பு
உலகுக்குத் தெரியவில்லை?

உள்ளொன்று வைத்து
புறமொன்று
பேசுபவர்க்குத்தானே
உலகத்தில் மரியாதை?

ஒவ்வொருத்தரின்
வெற்றிக்கு பின்னாலும்
ஒருவர் உண்டாம்

இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

ஒன்றுமே இல்லாத உன்னாலே
உயரத்தில் அவர்களை
உட்கார்த்த முடிகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அகிலத்தில் உன்னை
அறிமுகம் செய்தது
ஒரு இந்தியன்தானாம்
 
அதனாலோ என்னவோ
உன் மேல் எனக்கு
அளப்பரிய பிரியம்
 
ஆன்மீகத் தேடல்
உன்னிலிருந்தே தொடங்குகிறது
உன்னிடத்தே முடிவடைகிறது

உருவமுள்ளவனும் நீ
உருவமில்லாதவனும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ

ஆக்கமும் நீ
அழிவும் நீ

உன்னை
முற்றும் உணர்ந்தவர்கள்
சூஃபிகள் ஆனார்கள்
துறவிகள் ஆனார்கள்
முனிவர்கள் ஆனார்கள்

அறியாதவர்கள்
பூஜ்யமாகிப் போனார்கள்

உன்னிலிருந்து
பிறந்ததுதான் பிரபஞ்சம்
உன்னிலேயே
முடிவடையும் அது திண்ணம்

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு

நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?

பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?

மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது

பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது

எண்களுக்கு மாத்திரம்
நீ தொடக்கமல்ல

எல்லாவற்றிற்கும்
நீதான் தொடக்கம்
எல்லாவற்றிலும்
நீ அடக்கம்

உன்னை
சூன்யம் என்றவர்களை
சுட்டுவிடத் தோன்றுகிறது

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

நன்றி : திண்ணை (17.1.2008)