போதை

canpnml1.jpg 

உளறும் குடிகாரனின்

ஒருவரி ஆத்திச் சூடி

“ஊக்கமது கைவிடேல்”

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

பாதளச் சாக்கடை

manhole.jpg

பாரதியே !

பிறநாட்டுச் சாத்திரங்கள்

பைந்தமிழில்

பெயர்க்கச் சொன்னாய்

ஆலைகள் செய்வோம்

நல்ல

சாலைகள் செய்வோமென்று

வீதியெங்கும்

பாதாளச் சாக்கடை

மூடியைப் பெயர்த்தெடுத்து

அப்படியே போட்டுவிட்டு

போய் விடுகிறார்கள்.

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

  

அறம் செய விரும்பு

jail.jpg

அறம் செய்தான்
அலக்காக கம்பியை
அறுத்தெடுத்தான் 
 
சிறையிலிருந்து
சுவரேறி
சீறிப் பய்ந்தான் 
 
அவ்வையின் அந்த 
ஆத்மார்த்த ரசிகன்            
 
அப்துல் கையூம்          
vapuchi@hotmail.com

துக்ளக்

images-1.jpg 

துக்ளக் 

அன்றும் சரி

இன்றும் சரி

துக்ளக் ஆட்சிதானோ ? 

மழைக் கூட

‘சோ’வென்றுதான்

பெய்கிறது. 

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com   

அது ஒரு நிலாக் காலம்

home-page.jpg

நிலாவில் மனிதன்
நிலையாகி விட்டான்

முதற் காலனி
முளைத்தது

மூத்த தலைவரின் பெயர்
முறையே சூட்டப்பட்டது

எட்ட இருந்து பார்த்ததை
தொட்டுவிட்ட அவர்களை

ஆயிரமாண்டுகட்குபின்
ஆதி மனிதர்களென

வரலாற்று பக்கங்கள்
வரையறுத்து காட்டும்

நிலா புராணங்கள்
நினைவு கூறும்

நிலாவில் குடியேறிய
முதல் திங்கள் அது

நிலா மனிதர்கள்
பூமிச் சோறுக்கு
உலா போயினர்

அன்று ..
சித்ரா பௌர்ணமி

அங்கிருந்து கொணர்ந்த 
அவர்களின் பஞ்சாங்கம்
அம்புலி கணக்கை
அளந்து காட்டியது

ஆஹா .. ..

அகன்ற வட்டமாய்
அற்புத காட்சி தந்தது
அந்த அழகிய பூமி

நிலாவுக்கு ஏற்பட்ட
அதே களங்கம்
பூமிக்கும்

புத்தம் புது அனுபவம்
புளகாங்கிதம் அடைந்தனர்
புது உலகத்து மனிதர்கள்

பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு

அது ஒரு
நிலாக்காலம்

அங்கு விளையாடிய
அதே விளையாட்டை
இங்கும் ஆடினர்
இளஞ்சிறார்கள்.

அவர்கள் ஓட
அது ஓடியது

அது ஓட
அவர்கள் ஓடினர்

தொட்டில் குழந்தைகள்
தாய்மார்களiன் இடுப்புக்கு
தொற்றிக் கொண்டனர்

பூமியைக் காட்டியே
தொண்டைக்குள்
திணித்தனர் கவளங்களை

பூளோக ரம்பைக்கு
புடவை கட்டி பார்க்க
புதுக்கவிஞர்கள் புறப்பட்டனர்

ஆடை கட்டி
வந்த நிலவோ என
அழகு பார்த்தவர்களாயிற்றே?

நிலவைப்பாடி
நீர்த்துப் போன இவர்கள்
புதிய
உவமையையும்
உவமேயத்தையும்
உற்சாகமாகத் தேடினர்

இத்தனை நாள்
தாயாக இருந்த பூமி
இரவோடு இரவாக
இளமையாகிப் போனாள்

ஆம் … ..

பூமித்தாய்
பூமிக்கன்னியானாள்

மாறாக
நிலவுக் கன்னி
பொறுமையின் படிமம் ஆனாள்

காதலர்கள்
பூமியின் பொலிவை
கற்பனை கோர்த்து
கன்னியரை
வருணனை செய்தனர்

காதல் யுக்திக்கு
ஒரு புதிய
கிரியா ஊக்கி

நிலா நிலா ஓடிவா என்ற பாடல்
நர்ஸரி பாடத்திட்டத்தில்
நீக்கப்பட்டது

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
வானொலியில் ஒலிபரப்ப
தடை செய்யப்பட்டது

நிலா அது
வானத்து மேலே
பொருந்தாத பாடல்களென
பத்திரிக்கைகள் விமர்சித்தன 

புராணக் கதைகள்
திருத்தப்பட்டன
சந்திரனை
பாம்பு விழுங்கிய
பக்கங்களை தீயிலிட்டனர்

எங்கு நோக்கினும்
ராகு கேதுவுக்கு
எதிரான கோஷங்கள்

ஆம்ஸ்ட்ராங்குக்கு
ஆங்காங்கே
கோயில்கள்

அவன் திருவடி
பதித்த இடம்
பொற்பாதக்
கோவிலானது

சந்திர உடைகளில்
மந்திரம் கூறி
புரோகிதர்கள்
பூஜைகள் செய்தனர்

மூத்த குடியினருக்கு
முதல் மரியாதை
தந்தனர் அந்தணர்

அர்ச்சனைகள்
ஆம்ஸ்ட்ராங்கின் தாய்மொழி
ஆங்கிலத்தில் மட்டுமென
அறிவிப்பு வந்தது

மதவாதிகளும்
மிதவாதிகளும்
சரிபாதி பிரிந்தனர்

பகுத்தறிவு
பாசறைகள்
பரவத் தொடங்கின

வந்த இடத்திலும்
வருணாசிரமமா? என
வாதங்கள் எழுந்தன

அமரத்துவம் எய்திய
ஆம்ஸ்ட்ராங்
ஆங்கிலம் அன்றி
அனைத்தும் அறிந்தவன்

உயர் தமிழிலும்
ஒலிக்கட்டும் அர்ச்சனை
உரிமைக்குரல் ஒலித்தது

அர்த்தம் தொனிக்கும்
தர்க்கங்கள் பிறந்தன

ஆம்ஸ்ட்ராங்
வாகனம் ஏறி
வீற்றிருக்கும்
விக்கிரகங்கள்
நிலாவில்  வந்தது
வீதி உலா

யுகங்கள்
நகர்ந்தன

காலங்கள் மாற
காட்சிகள் மாறின

பூமியோடு ஒருநாள்
போர் மூண்டது

அயல் கிரகத்து
அந்நிய செலவாணி
அடியோடு நிறுத்தப்பட்டது

பூமி புத்திரர்களின்
சகவாசத்தை
பூண்டோடு வெறுத்தனர்

தேச விரோத சக்திகளென
சிலரது சிலைக்கு
சேதம் விளைவித்தனர்

சுதேசி பொருட்களுக்கு மாத்திரம்
சுதந்திரம் தரப்பட்டது

சந்திர புத்திரனாய் இரு
சந்திர பொருள்களையே வாங்கு
சந்திர சந்து பொந்துக்களiல்
சபதங்கள் ஒலித்தன

அதோ
புகைக்கு நடுவே
பூமிவாசியின் கொடும்பாவி
பாதியாய் பாவமாய்
பற்றி எரிந்தது

பூமியிலிருந்து புறப்படும்
வான ஊர்திகளை
வானிலேயே கடத்துவோமென
தீவிரவாதிகள்
தேதி குறித்தனர்

சாதிகள் ஒழிக்க
சங்கங்கள் பிறந்தன

ஆதிகுடிகளுக்கே
முன்னுரிமை என்று
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

புதிதாய் வந்த
குடியேறிகளுக்கு
தேநீர்க் கடைகளில்
தகரக் குவளைகள்
விகாரமாய் தொங்கின  

நிலாக்கிணறுகளில்
தண்ணீர் அவர்களுக்கு
தர மறுக்கப்பட்டது

அவர்கள்
புதைக்கவும்
எரிக்கவும்
புறநகருக்கு ஓடினர்

கவிஞர்களின்
புரட்சிக் கவிதைக்கு
புதிய தீனீ கிடைத்தது

சமுதாய மறுமலர்ச்சிக்கு
சரமாரி கவிதைகள்
சளைக்காமல் எழுதினர்.

பூமியில் வசித்த காலத்தை
அசை போட்டது
அவர்களின் மனசு

அது ஒரு
நிலாக்காலம்

சந்தோஷ மனைவி

many-faces.jpg
மனைவி …
படு சந்தோஷம் !

கூரை
சொந்தமாயிருந்து;

கொஞ்சுவதற்கு
மழலையும் இருந்து;

கழுத்திலே நகை;
கையிலே பணம்;

கைப்பிடிக்குள்
கணவன் இருந்தால் ..?

மனைவி .. ..
படு சந்தோஷம் !!!

                          அப்துல் கையூம்
                          vapuchi@hotmail.com
                           10.07.2007

ஒளவை சொன்ன மொழியாம்

group.jpg

ஆத்திச் சூடி
ஒளவையே ..!

சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா? என்று
சொல்லாட்சி செய்தவளே..!

காந்தி தேசமென்று
கவிஞன் சொன்னதும்

நீ தானம்மா
என்
நினைவில் வந்தாய்.

அன்று
மகாத்மா காந்தி;

அப்புறம்
இந்திரா காந்தி;

அடுத்து
ராஜிவ் காந்தி

சுட்ட பழங்களாக
அல்லவோ
சுருண்டு விழுந்தார்கள்..?

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com
 

காக்காய்க் கடி

lady-faces.jpg

ஓ நந்தலாலா !

காக்கைச் சிறகினிலே
உன் கருமை நிறம்
கண்ணுக்குத் தெரிந்ததாம்
அந்த கவிராஜனுக்கு.

ஓ ப்ரியசகி !

எனக்கோ … .. ..?

உன்னுடன் நான்
பகிர்ந்துக் கொண்ட

அந்த
காக்காய்க் கடி ..

கடவாய்ப் பல்லில்
காலங் காலமாய்
கனிந்தூறிக்
கொண்டிருக்கும்

அந்த
கமர்க்கட்டு
தித்திப்பு.

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
 

பள்ளித் தோழி

double-faces.jpg 

ஓ தோழி !

அந்த நொண்டியாட்டம்
இன்றுவரை
என் நினைவுகளோடு
முண்டியடித்துக் கொண்டு
ஒன்றாய் வருவதை
நீ அறிய மாட்டாய் ..!

நெற்றிப் பொட்டில்
செங்கல் சில்லை
சமன் செய்து
காயா? பழமா? என்று
கண்ஜாடை செய்வாய்..!

அது காயல்ல ..
கனிந்த நினைவுகள் !!

அப்துல கையூம்

vapuchi@hotmail.com

நினைவுச் சுள்ளிகள்

suvadu.jpg 

தனிமை வனாந்திரத்தில்

நினைவுச் சுள்ளிகளை

ஒவ்வொரு குச்சியாய்

உட்கார்ந்து பொறுக்குகிறேன்

சுள்ளிக் கட்டு ..

சுமையாக இருந்தாலும்

சுகமாக இருக்கிறது

பழையன கழிதல்

போகியோடு நிற்கட்டும்

நண்பா !

கடந்த கால நினைவுகளை

கந்தலென

பொசுக்கி விடாதே !

நிரம்பிய உண்டியலை

குலுக்கிப் பார்க்கிறேன்

நினைவுக் காசுகளின்

‘கிளிங்’ ‘கிளிங்’ சப்தம்

அந்த நாள் ஞாபகம் ..

அது ஒரு ஆலமரம்

நினைவுகள் எனக்கு

நிழல் தருகிறது.

இளைப்பாறுகையில்

இளகுகிறது மனம்.

இதயத்தின் இறுக்கம்

இளகுகிறது ஒரு கணம்.

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com